enathu paarvai

Meyyappan valai pathivukal.

Wednesday, February 25, 2004

பரந்துபட்ட அபத்திலியல்வாதம்

கொஞ்ச நாட்களாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்திருந்தேன், எதுவும் கிடைக்கவில்லை. வழக்கம்போல் ஏதாவது திரைப்படத்தைப் பற்றி எழுதியிருக்கலாம். ஆனால் அதைவிட சுளுவான ஒன்று இருக்கையில் ஏன் அதற்கு கால்மணிநேரத்தை செலவழிக்க :-) ஜன '99ல் அனுப்பிய பழைய தமிழிணைய பரந்துபட்ட அபத்தலியல்வாதம் பற்றிய அஞ்சல் ஒன்று..



ஆசான் அவர்களே,வணக்கம்..

>அதுக்குப் பின்னாடி, பின்நவீனத்துவம் அபத்தம் இன்னு சொல்லிக்கின்னு ஒரு பந்தி....
>அரிவுபூர்வமான கட்டுரையை எடுத்து வாசிச்சி வெச்சு, ஒங்களுக்கும் அனுப்பிச்சிருக்கேன்.
>பரந்த-அபத்தலியல்வாதம் (PAn-ABsurDism) &பரந்த அபத்தக்கவிதை (PAn-ABsurD PoEtry)

இந்த மாதிரி "வீச்சத்தினதும் ஆழத்தினதும் அகலத்தினதும் " ஆன பரந்துபட்ட கட்டுரையை படிக்க முயற்சித்து படிக்க ஆரம்பிக்கையிலேயே பழங்காலத்தில் எனக்கு மிக்க உதவியாக இருந்த "தாதாயிசத்தை" பற்றிய நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை..

பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குள் நுழையக் காத்திருந்த நேரமது.. உலகத்திலே இருக்கும் உயரமான, குள்ளமான, நீளமான வகையாறாக்களையும், இலக்கிய உலகில் ஒவ்வொருநாளும் புதிதாக வந்து குதித்துக்கொண்டே இருக்கும் எல்லா இஸங்களையும் மனப்பாடம் செய்துவைத்துக் கொண்டு அப்போ இப்போன்னு எடுத்து விட்டு பெண்களையெல்லாம் மயக்கி, மடக்கி வலையில் போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன் (பிற்காலத்தில் தான் தெரிந்தது.. அது எவ்வளவு முட்டாள்தனமான எண்ணம் என்று.. அதுக்குப் பதிலா கமலகாசன் ஸ்ரீதேவிக்கிட்ட பேசின வசனத்தையெல்லா மனப்பாடம் பண்ணியிருந்தால் ரொம்ப உபயோகமா இருந்திருக்கும்.. )..

ரியலிசம், சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், எக்சிஸ்டென்சியலிசம், க்யூபிசம், எக்ஸ்பிரசனிசம், ஸ்ற்றக்சுரலிசம்,நிஹிலிசம்,மாடர்னிசம், போஸ்ட் மாடர்னிசம், கம்யூனிசம்,காப்பிடலிசம், பெரியாரிசம், அண்ணாயிசம், எம்ஜிஆரிசம்(!?),பாசிசம், நாஜி஢சம்,மேனரிசம்,மிளகுரசம்....

இந்த மாதிரி இசங்களிலே மாட்டிக்கொண்டு தத்தளித்துக் கொண்டு எந்த இசத்திலே எழுதினா நம்ம கதையைப் படிக்கிறவன்லாம் சும்மா அசந்து போய் மூக்கில் விரலை வைத்து நிப்பான்னு கண்டபடி யோசித்துக் கொண்டு இருந்தேன் (இதுல கவணிக்கவேண்டிய விசயம் என்னவென்றால் நான் எழுதுவதைப் படிப்பது மொத்தம் இரண்டே பேர், ஒன்னு நான்;-) இன்னொன்று இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டோ மே நம்ம நம்ம தலையெழுத்துன்னு படிச்சுத் தொலைக்கிற என்னோட நண்பன், இதில் இன்னொரு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று வேறு இருந்தது.. நான் எழுதுவதை அவன் படித்தான் என்றால் அவன் எழுதுவதை நான் படித்தே ஆகவேண்டும்.. ;-))

இப்படிப்பட்ட ஒரு நன்னாளில் தான் தாதாயிசம் என்று ஒரு இசம் ரொம்ப நாளாக இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன்.. எதைப்பற்றியும் படித்து அறியுமுன்னரே அது இப்படித்தான் என்று எனக்கு ஒரு கருத்து உருவாகிவிடும்.. என்னை மாதிரித்தான் நிறையப்பேர் எல்லாவற்றைப் பற்றியும் உடனடி ஒரு டஜன் கருத்து வைத்து இருக்கிறார்கள்.. அந்த மாதிரி "தாதாயிசம்" என்பது மரியா பூசோவும் அவரைப் பின்பற்றி நம்ம மணிரத்னமும் சேர்ந்து அடிதடி தாதாக்களின் வாழ்க்கைமுறையை மிகவும் ஆராய்ந்து உருவாக்கிய கொள்கைக்கோட்பாடு என்று கூறினேன்.. எனது நன்பன் "தாதாயிசம்" உண்மையில் தாத்தாயிசம் என்பதன் மரூஉ என்றும், உண்மையில் தமிழகத்தில் தான் முதன்முதலில் தோன்றியது என்றும், வயதானகாலத்தில் ஏற்படும் வாழ்க்கையில் இருந்து வெளியேற்றப்படுதலையும், அந்நியமாதலையும், மனச்சிக்கல்களையும் வெளிப்படுத்துதலே இதன் நோக்கம் என்றும் கூறினான்.. வழக்கம் போல் அவன்கருத்தை நானும், என் கருத்தை அவனும் எதிர்த்துக் கொண்டிருந்தோம்..

"சோடாபாட்டில் சிதறல்கள்" என்ற தலைப்பில் சோடாபுட்டி, சைக்கிள்செயின், பெட்ரோல் குண்டு, வீச்சறுவாள் ஆகியவற்றைக் கதாபாத்திரமாகக் கொண்டு நானும், "சோடாபுட்டியின் தணிமை" என்ற தலைப்பில் உடைந்த மூக்குக்கண்ணாடி, ஈஸிச்சேர், பல்செட் ஆகியவற்றைக் கதாபாத்திரமாகக் கொண்டு என் நண்பனும் மிகப் பெரிய நாவல் ஒன்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம்..

அந்த நாவலை எழுதுவதற்காக நூலகத்தில் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தான் தாதாயிசம் (Dadaism) வேறு என்று அறிந்தேன்.. (நூலகத்தில் களப்பணிசெய்வது என்பது என்னவென்றால் ரேசன் கடைக்குப்போ, மளிகைக்கடைக்குப் போ, அங்கே போ, இங்கே போ என்ற அம்மாக்களின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக நூலகத்திற்கு அருகில் இருக்கும் மரத்தடியில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது).

தாதாயிசம்/டாடாயிசம் இருபதாம் நூற்றாண்டுகளின் ஆரம்பகாலத்தில் தொடங்கிய இயக்கம்.. இதனிலிருந்தே பிற்காலத்தில் சர்ரியலிசமும், அப்சர்டிசமும் தோன்றியது.. அறிவியலும், பகுத்தாராய்தலுமே உயிர்கொல்லி ஆயுதங்களுக்கும், அதன் விளைவான பேரழிவு உண்டாக்கும் போர்களுக்கு, குறிப்பாக முதலாம் உலகப் போருக்குக் காரணம் என்று இதை உருவாக்கிய பிரான்சு மற்றும் ஜெர்மானிய இலக்கியவாதிகள் கருதினார்கள். இதற்கு கலாபூர்வமான எதிர்ப்பைத் தெரிவிக்கும் முறையாக தாதாயிசத்தை உருவாக்கினார்கள். அதுகாறும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த அழகியல் மதிப்பீடுகளுக்கு எதிரானது என்று தங்களின் கொள்கைகளைப் பிரகடனம் செய்தனர்.

அழகியல் ஒருமை, கலைச்சேர்க்கை ஜோடனைகள், அறிவுசார் முன்னேற்றம் ஆகியவற்றைத் தவிர்த்த/எதிர்த்த படைப்புக்களை உருவாக்கினர். 1919 ல் வெளியிடப்பட்ட தாதாயிசக் கொள்கைஅறிக்கையில் ட்ரிஸ்டன் ஸாரா (Triston Tsara) பினவருமாறு குறிப்பிடுகிறார்:


"கருத்தோர்மை அழிப்பு.. நினைவுகள்/ஞாபகங்களின் அழிப்பு.. போதனாவாதிகளின் அழிப்பு: டாடா.. ஏற்றுக்கொள்ள முடியாததாகவோ அல்லது உடல்இன்பமளிப்பதாகவோ இருக்கும் உங்களின் கருத்துக்களை ஒரு மின்னிடும் அருவியைப் போல் கொட்டிடுங்கள்., விடுதலை.. டாடா..டாடா..டாடா.. கர்ஜிக்கும் அடர் நிறங்கள்.. ஒன்றினையும் எதிர்முனைகள், சிதைக்கப்பட்ட அழகு, முரண்பாடு: வாழ்க்கை"


இதை இன்னும் முன்னெடுத்துச் சென்று பின்னாளில் அபத்தலியல் வாதம் உருவானது.

இந்த மேற்பட்ட கொள்கையில் மிகத் தீவிரமாகக் காதல்வயப்பட்டு பலவிதமாக உளறி கவிதை எழுத ஆரம்பித்தேன். அதைப் படித்த என் நண்பன் "என்ன இது பேத்தல்.. சுத்த அபத்தமாயிருக்கே" என்றான். அதைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் ஆடியதைப் பார்த்து அவனுக்கு சுத்தமான ஒன்றும் புரியவில்லை.. "எவ்வளவுக்கெவ்வளவு அபத்தமாக இருக்கோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது" என்று மேலும் தொடர்ந்த எனது இலக்கியப் பணி எதிர்பாரதவிதமாக அற்ப ஆயுளில் முடிந்து விட்டது..

அதெல்லாம் பழைய கதை.. கடைசியாக ஞாபகத்தில் இருக்கு ஒரு தாதாயிசக் கவிதையை மேலும் கொஞ்சம் குழப்பி இங்கு எழுதுகிறேன்.. இல்லை இல்லை.. என் கை எழுதுகிறது.. ஓ.. அதுவும் இல்லை.. எனக்குத் தெரியாமல் என் கையும், கைக்குத் தெரியாமல் கணினி பொத்தான்களும், தானே அடிக்கின்றன..



தனிமையின் மரணம்
===============

பறவை இறகுகளின் பாரம் தாங்காது
விடாது துடிக்கிறது உன் இதயம்..
படபடப்பின் சிறுஅசைவும் கூடத்
தெரிந்து விடுகிறது இரைக்கு..

புகைசூழ்ந்த அறையின் மூலைகளில்
மெதுவாக நகரும் மௌனம்...
ஒளிக்கற்றையின் விளிம்பில் அறுபட்டுத்
தொங்கும் எந்தன் பெருமூச்சு..
பழையனவெல்லாம் கரிப்புகையாய்ப்
படிந்திருக்கிறது..

ஆடுகளின் சம்மதத்தோடு வெட்டப்பட்ட
தலைகள் தனியாய் இருக்கின்றன..
சிட்டுக்குருவி சிலிர்த்து சிறகுகோதுவது
மட்டும் தினந்தோறும் நடந்தேறுகிறது..

பற்றிக்கொள்ள கொடிகளுக்கு ஆசை
பரவித்தழுவ என் தனலுக்கு ஆசை..
எப்பொழுது ஆரம்பிக்கும் என்
அழிவின் பேரோசை...


ஜன 23 '99, 1:40 காலை EST

0 Comments:

Post a Comment

<< Home