enathu paarvai

Meyyappan valai pathivukal.

Friday, April 02, 2004

தமிழகத்தில் தற்கொலைகள்

இன்று பிபிஸி யில் படித்த ஒரு செய்தி பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். உலகிலேயே தென்னிந்தியாவில் தான் தற்கொலை விகிதம் அதிக அளவில் இருக்கிறது என்பது எனக்கு எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு செய்தி. அந்தக் கட்டுரையின் கடைசி பத்தியில், "பெரிதும் விவசாயம் சார்ந்திருந்த சமூகம், தொழிற்சார்ந்த சமூகமாக மாறும்காலகட்டத்தில் அது தீவிரமான பிரச்சினையை (தலைமுறை இடைவெளி, பால் வேறுபாட்டு) எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது." என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு கட்டுப்பாடான விவசாய சமூகம் மாறிவரும் சூழலை எதிர்கொள்ளுகிறதனால் வரும் விளைவுகள் என்பதனைத் தமிழகத்திற்குப் பொருத்திப் பார்க்க முடியுமென்றாலும் இன்னும் சில காரணிகளும் நினைவில் தோன்றுகிறது. 10-19 வயதினர் பெரும்பாலும் இரு காரணங்களால் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். ஒன்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமை. துனைக்கண்டத்தைத் தவிர வேறெங்கிலும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஒரு நிகழ்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்குமா என்று தெரியவில்லை. நடுத்தட்டு குடும்பங்களில் தேர்வு என்பது எப்பொழுதும் கழுத்தை நெரித்தபடியே தான் இருக்கிறது. குழந்தைகள் மீது சுமத்தப்படும் எதிர்பார்ப்பும், சுமைகளும் இளைஞர்களை எக்கணத்திலும் ஒடித்து விடக்கூடியதாய் இருக்கிறது.

தேர்வில் தோல்வி என்பது ஒரு இருபது ஆண்டுகளாகத்தான் திறமையுடனும், மானத்துடனும் (!) சம்பந்தப்படுத்தப் படுகிறது என்று நினைக்கிறேன். இதற்கும், நர்சரி, மெற்றிகுலேஷன் கலாச்சாரத்திற்கும் எதுவும் தொடர்பிருக்குமா என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய கேள்வி. தேர்வில் தோல்வி என்பதையும் விட மதிப்பெண்னும், மதிப்பெண் சார்ந்த அதீத எதிர்பார்ப்பும் தற்கொலைக்குத் தள்ளுவதாய் இருக்கிறது.

இன்னொரு காரணி காதல் தோல்வி. காதல் சார்ந்த அதீதமான புனிதங்களே, அந்தப் புனிதத்தை அடைய முடியாத நிலையில் அதைத் தோல்வியாகச் சித்தரிக்க வைக்கிகிறது என்று நினைக்கிறேன். தவிர சாதி, பொருளாதார நிலை வேறுபாடுகளும் காதலில் இன்னும் பங்காற்றுகின்றன. மேலைக்கலாச்சாரத்தில் காதல் தோல்வி என்பது தற்கொலையைத் தூண்டும் ஒரு நிகழ்வாக இல்லை.

பதின்வயது தற்கொலைகளுக்கு இவை காரணங்களாக இருந்தாலும் பெரும்பாலும் வறுமையும், கந்துவட்டிக் கொடுமைகளுமே பல குடும்பங்களைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது. நெசவாளர்களும், விவசாயிகளும் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளுவது ஒரு "செய்தி" என்ற அளவில் ஆகிவிட்டதற்கும், அதைச் செய்தியாக ஏற்றுக்கொண்டு அதைப் படித்துவிட்டு அடுத்த செய்திக்குச் செல்ல என் மனமும் தயாராக இருப்பதற்கும் என்ன காரணம் ?

0 Comments:

Post a Comment

<< Home