enathu paarvai

Meyyappan valai pathivukal.

Thursday, April 08, 2004

சில தவறுகளும், அதைப் பதிவதும்

"உலகத்தமிழ்" மின்னிதழில் காலச்சுவடு கண்ணனின் பத்தியான "சிதறல்கள்" படித்தேன். எழுதியிருந்த மூன்று விஷயங்களில் இரண்டு தவறான தகவலுடன் இருந்தது. (மூன்றாவது வாட்டர்கேட் ஊழல் பற்றியது. அதுபற்றி எனக்கு விரிவாகத் தெரியாது).

முதலாவது: "஑ஜனாதிபதியின் வகுப்பறைக்குச் சென்றோம். ஜனாதிபதி ஜான் கென்னடியால் 1968ல் உருவாக்கப்பட்டது". 1968ல் ஜான் கென்னடி மறைந்து 5 வருடங்கள் ஆகியிருக்கும். எப்படி உருவாக்கினார் என்று தெரியவில்லை. உறுதி செய்து கொள்ளத் தேடியதில் Presidential Classroom பக்கத்தில் கென்னடி உதிர்த்த எண்ணங்களின் வழியில், உட்ரோ வில்சன், லிண்டன் ஜான்சன் வழியில் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். காமராஜர் பேரை நம்ம ஊரு காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் எடுத்துச்சொல்வதைப் போலத்தான்...

இரண்டாவது: "இறந்த கணவர் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றார். அவரது மனைவி தற்பொழுது மிசௌரி கவர்னராகப் பணியாற்றி வருகிறார்" என்பதில் இரண்டு பிழைகள். மெல் கார்னகான் போட்டியிட்டது 2000ல் செனட்டர் பதவிக்கு, கவர்னர் பதவிக்கு அல்ல. தேர்தலுக்கு முன்பே ஒரு விமான விபத்தில் மெல்கார்னகான் உயிரிழந்தார். மிசௌரி மாநில சட்டத்தின்படி வாக்குச்சீட்டை திருத்த இயலவில்லை. இறந்தவர் வெற்றி பெற்றால், கவர்னர் வேறொருவரை நியமிக்கமுடியும் (இடைக்காலத்திற்கு மட்டும்). அதன்படி அவரது மனைவி ஜீன் கார்னகான் செனட்டராக பதவியேற்றார். மீண்டும் 2002 ல் நடந்த இடைக்காலத் தேர்தலில், அவர் குடியரசுக்கட்சி வேட்பாளரான ஜேம்ஸ் டாலண்டிடம் தோல்வியுற்றார். (நவ. 2000 தேர்தலில் இறந்தவரிடம் தோல்வியுற்றவர் தற்பொழுது எல்லோரையும் சட்டத்தைக் காட்டி மிரட்டி அடாவடித்தனம் பண்ணும் ஜான் ஆஷ்கிராப்ட்).

என்று நான் எழுதிவிட்டேன். இப்பொழுது இதை வலைப்பதியுமுன் கொஞ்சம் யோசனை. மீண்டும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டும் பதிவு. இதைப் பதிந்து என்ன ஆகப்போகிறது. அதே ஒரு நல்ல விஷயத்தைப் பற்றி எழுத உத்வேகம் இல்லை. சுந்தரவடிவேல் குறிப்பிட்டிருந்தபடி பின்னூட்டங்களை எழுதுவதிலும் இல்லை. ஏன் எங்காவது ஒரு பிழையைப் பார்த்தால் உடனே எழுதத் தோன்றுகிறது ? நம்மை எல்லாம் தெரிந்த ஆளாகக் காட்டிக்கொள்ள வாய்ப்பு, அல்லது ஒரு பிரபலமானவரை மட்டம் தட்டுதல் மூலம் என்னை முக்கியமானவனாகக் காட்டிக் கொள்ள வாய்ப்பு என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், நிச்சயம் தவறைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும், அப்பொழுது தான் கட்டுரையாளர்களுக்குத் தங்கள் தகவல்களைக் கொஞ்சமாவது சரிபார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது தோன்றும். கண்ணனுக்கும் இதை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். (செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து எப்பொழுதும் எனக்குக் கேள்விகள் இருக்கிறது. நான் பள்ளிக் காலங்களில், தினமும் காலையில் வீட்டையடுத்து இருந்த முடிதிருத்தகத்தில் தினத்தந்தி படிப்பேன். ஒவ்வொரு முறை சிவகங்கையைச் சார்ந்த செய்தி வரும்போதும், அது பாதி தப்பும் தவறுமாக இருக்கும். பேர்கள் மாற்றப்பட்டிருக்கும், தகவல் பொய்யாக இருக்கும். எனக்குத் தெரிந்தது சிவகங்கைச் செய்தி மட்டும் தான். மற்ற ஊர்காரர்கள் அவர்கள் ஊர் சம்பந்தப்பட்ட செய்தியைப் படித்தபோது என்ன நினைத்திருப்பார்களோ. )

0 Comments:

Post a Comment

<< Home