enathu paarvai

Meyyappan valai pathivukal.

Friday, February 18, 2005

சலாமத் ததாங் - சலாமத் ஜலான்

ஐந்து வாரங்கள் பயணம் முடிந்து ஒருவழியாக மீண்டும் பழைய நிலைக்கு வந்தாகிவிட்டது. வழக்கமாக ஊர் செல்லுகையில் அங்கிங்கு ஊர் சுற்றல், புகைப்படம் எடுத்தல், நண்பர்களுடனான வெட்டிப்பேச்சு என்று போகும். இந்த முறை தோளில் சுமந்து சென்ற குதூகலப் பொதியினை ஊருக்குக் கூட்டிக்கொண்டு காட்டி வருவது தான் முக்கியமானதாக இருந்தது. பெரும்பாலும் குடும்பம், ஊர், உற்றார், உறவினர் குறித்த தனிப்பட்ட அளவினதான மகிழ்ச்சி. மற்றபடிக்கு முன்னர் சொன்னது போல குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக அவ்வளவாக இல்லை. தமிழகத்திற்கு செல்லும் வழியில் மலேசியாவில் ஒரு வாரம் சுற்றினோம். அது பற்றிய நினைவிலிருக்கும் சிறு குறிப்புகள் மட்டும்.

மலேசியா குறித்த உருவகம் சிறுவயதுச் சூழலினால் ஓரளவு உருவாகியிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்காசிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு இல்லாத செட்டிநாட்டுக் கிராமம் இருக்கமுடியாது. வீட்டிலிருந்த வயதானவர்களின் மூலம் கிடைத்த பார்வையும், அது குறித்த விமர்சனப் பார்வையும்,பின்னர் 'புயலிலே ஒரு தோணி' படித்து வந்த பார்வையும், மலேசியாவைக் குறித்த ஒரு எண்ணத்தை உருவாக்கி விட்டிருந்தது. தமிழர் 11% சதவீதம் வசிக்கும் நாடு என்பதும் எனது எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். தென்கிழக்காசியாவிலேயே மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இல்லாத நாடு மலேசியா. இயற்கை வளங்களும் அதிகம். அதனால் சராசரி மக்களின் வாழ்க்கை முறை ஓரளவு வசதியானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நகரம் நோக்கிய நகர்வின் காரணமாக பெருநகரங்களில் மக்கள் பெருக்கமும், நெரிசலும், மாசும் இருக்கத்தான் செய்கிறது. கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் மலேசியா கட்டுமானத்துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அறிந்து கொண்டேன். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களைப் போலல்லாது பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் உடலுழைப்பு வேலைசெய்கிறார்கள். துப்புறவுத் தொழிலாளர்கள், மூட்டை சுமப்பவர்கள், கட்டிடக் கூலிவேலை செய்பவர்கள், விவசாயிகள் என்று நிறைய பார்க்கக் கிடைக்கிறார்கள். கல்வியைத் தொடர்வதிலும் பலசிக்கல்களைச் சந்திக்கிறார்கள். (இப்படியாக மானுடவியல் ஆராய்ச்சிப் பயணம் போன்ற ஒரு போக்குக் காட்டுகிறேன் என்றாலும், மலேசிய விமானத்தில் பயணச் செலவு குறைவு என்பதனையறிந்து, அப்படியே நாட்டையும் சுத்திப் பார்க்கலாம் என்ற நோக்கில் தான் சென்றேன் என்பது எல்லோருக்கும் தெரியும் தானே ;-) ).

எங்களது பயணம் பெரும்பாலும் பினாங்கு, அலோர் ஸ்டார், கோலாலம்பூரில் உள்ள வழக்கமான சுற்றுலாத் தளங்களை ஒட்டியே இருந்தது. பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோ ம். நாட்டின் உட்பகுதிகளைச் சென்று பார்க்க விருப்பமிருந்தாலும், நாங்கள் பெரும்பாலும் நகரத்தை விட்டகலா சுற்றுலாப் பாதைகளிலேயே சென்றோம். வழியில் நிறைய சிறு ஆச்சரியங்கள். கோலாலம்பூரின் உயரக் கோபுரமான கேஎல் டவரில் 'ஒலி வழிகாட்டி' வாடகைக்கு எடுத்துக்கொண்டோ ம். காதுக்குள் வைத்துக்கொண்டதும் இனிய தமிழில் மலேசியாவை பற்றிய விவரணை. தமிழ்நாட்டு இந்திய விமானத்திலே கூட தமிழைக் கேட்காத காதுகளுக்கு இதைக் கேட்டது ஆச்சரியம் வரத்தானே செய்யும். அதேபோல வானொலி பண்பலைத் தமிழும் கேட்பதற்கு வித்தியாசமானதாகவும், கொஞ்சம் உற்சாகமானதாகவும் இருந்தது. பின்னர் தான் சென்னையில் சூரியன், மிர்ச்சி இவற்றைக் கேட்டேன். ஆனால் மலேசியா வானொலியில் ஓரளவிற்கு சினிமாவைத் தவிர்த்த மற்ற நிகழ்ச்சிகளும் இருந்த மாதிரித் தோன்றியது. (ஒரு நிகழ்ச்சியின் தலைப்பு "ஆமாவா.. அப்படியா.. ஆஹாஆஆஆஆ". இதை அந்தப் பெண் உச்சரித்த முறை எங்கள் பையனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது போல. ஓவ்வொருமுறை கேட்கையிலும் சிரிச்சுக்கிட்டே இருந்தான்).

ரோட்டோ ரத்தில் நிறைய இளநி கிடைத்தது. நகரத்தைத் தள்ளி இருந்த இடங்களில் நுங்கும் கிடைத்தது. கோலாலம்பூரில் மாலை புகழ்பெற்ற 'பெடாலிங் தெருவிற்கு"ச் சென்றோம். gucci கடிகாரங்களில் ஆரம்பித்து, இன்னும் வெளிவராத ஹாலிவுட் திரைப்படங்களின் டிவிடி, போலோ, ரீபொக் ஆடைகளென்று "சைனா டவுன்" முழுவதும் மலிவு விலையில் பொருட்கள். ஹாங்காங், தாய்லாந்திலிருந்து கொண்டுவந்து இங்கு விற்கிறார்கள். ஒரு சீனக் கடைக்காரர், எங்களைப் பார்த்து " வாங்க.. வாங்க.. பாப்பா தம்பியா.. தங்கையா " என்றளித்த வரவேற்பில், அவருடைய கடையில் சிரித்துக்கொண்டே சில பொருட்களை வாங்கினோம்.

பினாங்கில் கேக் லோக் சீ புத்தக்கோயிலின் ஆமைக்கூட்டம், பாம்புக் கோயிலில் ஒய்யாரமாகத் தூங்கும் பாம்புகள், சீன ரோட்டோ ர உணவுக் கடைகளில் கிடைக்கும் வகைவகையான பண்டங்கள், கோயிலின் வெளியில் விற்கும் சீனக் கைவினைப் பொருட்கள் இப்படியாக பெரும்பாலும் சீனத் தன்மையுடன் தான் இருந்தது. மற்றபடிக்கு அதிகம் கவர்ந்தது மலாய் உணவு.

உணவை ரசிக்கும் எவருக்கும் தென்கிழக்காசியா ஒரு அட்சயபாத்திரம் தான். மலாய் உணவகங்களின் உணவுப் பட்டியலே ஒரு நீண்ட கவிதைக்கு நிகராணது தான் ;-). ஒவ்வொரு வரியும் படிக்கையிலே பல்வேறு உணர்வு நிலைகளுக்கு இட்டுச் செல்லுகிறது. சீன, மலாய், தாய் , தமிழக, இஸ்லாமிய சமையல் முறைகள் ஒருமிக்கையில் உருவாகும் பல்வேறு சாத்தியங்கள். தவிர பருவநிலை காரணமாக விளையும் வகைவகையான் காய்கறிகள், கீரை வகைகள், சூழ்ந்த கடலில் கிடைக்கும் வகைவவையான மீன்கள், மா,பலா,வாழை,கொய்யா தவிர லொங்கான், ரம்பூதான், மங்குஸ்தான், பைனாப்பிள் என்று சமையலுக்குத் தேவையான பொருட்களின் மிகுதியும் காரணமாக இருக்கலாம். டுரியன் பழத்தைப் பற்றி நிறைய இடத்தில் படித்திருப்பீர்கள்.

Roti jalanகடைகளில் வீச்சுப் பரோட்டா, முட்டைப் பரோட்டா ஆகியவை கிடைக்கும், அமெரிக்க மலாய் உணவகங்களிலும் பெரும்பாலும் இவை கிடைக்கிறது. ஆனால் நான் பார்த்து அதிசயப்பட்டது "ரோட்டி ஜாலா" (தமிழில் சொன்னால் வலைத்தோசை !). துளையிட்ட கரண்டியின் மூலம் இந்தத் தோசை ஊற்றுவதைப் பார்ப்பதே ஒரு நல்ல அனுபவந்தான். ஏறக்குறைய தென்னைமரத்தில் கிளையை மரத்துடன் பிணைக்கும் சல்லடையைப் போன்ற தோற்றம். காரமான கோழிக்குழம்புடன் பரிமாறுகிறார்கள்.

கோய் தியாவும் எனக்கு மிகவும் பிடித்தது. சீனர்களின் மலாய் ரோட்டுக்கடைகளில் நாசிலாமா (உள்ளடக்கம்: தேங்காய் சாதம், வரமிளகாய்த் துவையல், சிறுமீன் பொறியல்) பொட்டலங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இரண்டு பொட்டலங்களையும் ஒரு கப் மலாய் கோப்பியும் குடிப்பதாக நினைத்தாலே ஒரு திருப்தியான புன்னகை தோன்றுகிறது. இன்னும் சீனர்கள் நடத்து ஹாக்கர் கடைகளின் உணவைப் பற்றி நிறைய எழுதலாம். இன்னொரு முறை எழுதவேண்டும்.

படங்கள் இணையத்திலிருந்து உருவியது.
சலாமத் ததாங் - சலாமத் ஜலான் : வணக்கம் - டாடா (மலாய்)
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 17, 2005

விடுமுறை களித்து...

ஊருக்குப் போயிட்டு வந்தாச்சு. திரும்பி வந்து பாத்தா ஏதோ வேற எடத்துக்கு வந்த மாதிரி இருக்கு.

வலைப்பதிவுகளின் உருவம் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும் மாற்றம் தெரிகிறது. காத்திரமான பல புதிய பதிவுகள் படிக்கக் கிடைக்கிறது. தொடர்ந்து நடக்கும் உரையாடல்கள் ஏதாவது ஒரு வகையில் நமது சிந்தனையைப் பாதிக்கும் என்ற வகையில் எல்லாவகையான எழுத்துக்களுக்கும் இடமுண்டு என்றே தோன்றுகிறது. தமிழ்மணத்தில் புதிதாக இடம்பெற்றிருக்கும் சேவைகள், தமிழ்மணத்தை அடிக்கடி பார்க்க வைக்கிறது. வலையைச் சுற்றுவதை இவ்வளவு எளிதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் ஆக்கிய காசிக்கும், இதற்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இங்கிருந்த ஹேலோஸ்கான் இலவசசேவை பின்னூட்டங்கள் காணாமல் போய்விட்டது. ஊருக்குச் சென்று திரும்பியதைப் பற்றி எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்றும், கொஞ்சம் இருக்கிறது என்றும் ஒரே சமயத்தில் தோன்றுகிறது. சீக்கிரமாக எழுதாவிட்டால் அந்தக் கொஞ்சமும் இல்லையென்றாகிவிடும்..
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.